அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

இதுவும் வாழ்க்கைதான்

2 comments
எப்போதும் நண்பர்கள் புடை சூழ ,வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் காணும் அவன் வீட்டிற்கு ஒரே பையன்.ஆனால் பாசத்திற்காக ஏங்கிய நாட்கள் ஏராளம்.அம்மா,அப்பாவின் அன்பு அவனுக்கு எட்டிக்காயாய் கசந்தது. கல்லூரி என்னும் வசந்த காலமும் வந்தது. நண்பர்கள் என்னும் றெக்கையும் முளைத்தது.பறக்க ஆரம்பித்தான் வானத்தில்.ஆனால் இன்னும் அந்த ஏக்கம் தீரவில்லை.

அப்போது தான் அவளும் வந்தாள், காதலியாக அல்ல, தங்கையாக.ஆமாம் இவன் வாழ்க்கை சற்று வினோதமானது.இவன் பரம்பரை துளி அளவுக்கு கூட தங்கை என்ற வார்த்தையை கண்டது இல்லை.உண்மைதான் இவன் ஏங்கியது தங்கை பாசத்திற்கு.அவளுடைய அம்மா சிறு வயதில் இறந்து விட்டாள் என்று நண்பர்கள் சொல்ல வெடித்தது கருணை என்ற எரிமலை.ஓடினான் அவள் அருகில், செல்லமாக ஒரு கொட்டு அவள் தலையில் வைத்து சொன்னான் ”இன்று முதல் நீ என் தங்கை” என்று.அன்று முதல் அவள் யாரிடம் பேசினாலும் பிடிக்காது,பழகினாலும் பிடிக்காது.இயற்கைக்கு இவன் மட்டும் விதி விலக்கா?ஆமாம் நாம் எப்போதும் நமக்கு அன்பானவர்களை அதை செய்யாதே, இதை செய்யாதே என்று ஆதிக்கம் செலுத்தி அவர்களை மாற்றுவது தானே வேலை.அன்பு என்பது அப்படியே எற்றுக்கொள்வது என்பது அவனுக்கு தெரியவில்லை.

இதற்கிடையில் அவளுக்கு காதலனும் வந்தான்.ஆரம்பித்தது பாசப் போராட்டம்.இரு பக்கமும் அவளுக்கு ஆரம்பித்தது இடி.அவள் காதல் வளர ஆரம்பித்தது வளர்பிறையாக,அண்ணண் பாசம் செல்ல ஆரம்பித்தது தேய்பிறையாக.அவள் பொய் சொல்லவும் ஆரம்பித்தால்.அன்று தங்கை பாசத்திற்காக ஏங்கியவன், இன்றோ அதே பாசத்தால் உருகி உருகுலைய தொடங்கினான்.அன்று அண்ணண் எதிரில் பேச கூட பயந்தவள், இன்று அவனுக்கு எதிரில் காதலனுடன் கைகோர்த்து செல்கிறாள்.காலங்கள் செல்ல செல்ல ஏமாற்றங்கள் அதிகரித்தன.

ஒரு கட்டத்தில் அவளுக்காக உயிர் நண்பர்கள், ஆசிரியர்கள் என எல்லோரிடமும் சண்டை போடுகிறான். நண்பர்களோ நீ என் நண்பன் இல்லை என்று எட்டி உதைக்கிறார்கள்.தங்கையின் காதலன் மிக நல்லவன்,இவனின் உயிர் நண்பன் என்பதால் மௌனமாக பச்சை கொடி காட்டினான்.எந்த தங்கைக்காக நண்பர்கள், ஆசிரியர்கள் என எல்லோரையுமே பகைத்தானோ! அவள் இது வரை தன் காதல் விஷயத்தை அண்ணணிடம் சொல்லவே இல்லை.பொய் என்ற போர்வையால் அனைத்தையும் மூடி மறைத்தாள்.ஒரு கட்டத்தில் தங்கையிடம் கேட்பதென முடிவெடுத்தான்.அவளிடமும் கேட்டான்.அவளும் உண்மையை சொல்ல அவன் இதயமே வெடித்தது போல் ஆனான், ஏன் தெரியுமா?ஆமாம் அந்த கல்லூரி முழுவதும் நண்பர்கள்,ஆசிரியர்கள் என அனைவரும் சொன்னார்கள் ” உன் தங்கை காதல் செய்கிறாள்,உன்னை ஏமாற்றுகிறாள்” என்று.அவர்களுக்கு அவன் என்ன பதில் சொன்னான் தெரியுமா? ”யார் என்ன சொன்னாலும் சரி என் தங்கை மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு” என்று சொல்லி சண்டை போட்டான்.ஆனால் அவன் தங்கையோ சிரித்துக் கொண்டே காதல் விஷயத்தை சொன்னாள்.அழுதான்,புலம்பினான்,தூக்கம் இல்லை,உணவு இல்லை,அம்மா அப்பா மறந்து போனார்கள்,நண்பர்கள் மறந்து போனார்கள்.ஆமாம் அதே நிலை அன்று புத்தனுக்கு வாழ்வில் ஏற்பட்ட கசப்பான நிலை.

அன்று முதல் அவன் யாரிடமும் பேசுவதும் இல்லை.இந்த நேரத்தில் கல்லூரியும் முடிவுக்கு வந்தது.எல்லோருமே அவனை விட்டு நகரத் தொடங்கினார்கள்.அவன் அப்போது முழு ஞானியாக இருந்தான்.கல்லூரியின் கடைசித் தேர்வும் முடிந்தது.அன்று மாலை அவன் தங்கையின் காதலனைப் பார்த்தான்.அவனுடைய சந்தோஷம் மட்டும் அவன் கண்ணில் பட்டது.கண்ணீருடன் வீட்டிற்கு சென்றான்.வீட்டின் மாடியில் இருட்டில் கண்ணீருடன் கல்லூரி வாழ்க்கையை அசை போட்டான்.அப்போது தான் நண்பன் ஒருவன் சொன்னது ஞாபகம் வந்தது ” அவள் எங்கு இருந்தாலும் அவளுக்கு நீதான் அண்ணண்” என்று.அவனுடய கண்ணில் ஒரே பிரகாஷம் வந்தது ஞானம்.எடுத்தான் பேனாவையும் பேப்பரையும் வேகமாக எழுதினான் இப்படி

””நான் உன்னை மறக்கவில்லை,மறைத்துவிடுகிறேன்

ஆமாம் அவன் அவளை விட்டுக் கொடுத்தான் நண்பனுக்காக.இப்போதுதான் அவனுக்கு வாழ்க்கை புரிந்தது.விட்டுக்கொடுப்பதும் , எதிரே உள்ளவரை மாற்ற நினைக்காமல் அப்படியோ ஏற்று கொள்வதும் தான் வாழ்க்கை, உண்மையான அன்பு.இன்றோடு மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன அவளிடம் பேசி.அவளை நினைத்துக் கொண்டே ,வாழ்த்திக் கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.அந்த அன்பு அண்ணண்.

2 comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..