அறுசுவை தமிழ்

ஓர் அழகான எழுத்து முயற்சி.

தன்னம்பிக்கை நேரம்::உன்னையே நீ அறிவாய்

1 comment
எதையும் ஏன்? எதற்கு? எப்படி? என கேள்விகள் கேட்கச்சொன்னார் சாக்ரடீஸ்.ஆனால் அவ்வாறு கேட்பதானால் ஆகும் விளைவுகளை அவர் சொல்லவே இல்லை.உண்மையில் இந்த உலகை புரட்டிப்போட்ட அத்தனை விசயங்களும் கேள்விகள் கேட்டதினாலே விளைந்தவை.சரி ஏன் கேள்விகள் கேட்க வேண்டும்?கேள்வி
கள் கேட்பதனால் என்ன பயன்? யாரிடம் கேள்விகள் கேட்பது?

கேள்விகள் தான் மனித பரிணாமத்தின் முதல் படிக்கட்டுகள்.எப்போது மனிதன் கேள்வி கேட்க ஆரம்பித்தானோ? அன்றே அவன் சிந்திக்க ஆரம்பித்து விட்டான்.உண்மையில் சிந்தனை என்பது பல கேள்வி பதில்களின் கூட்டுத்தொகுப்பு.நாம் சிந்திக்க வேண்டுமானால் முதலில் கேள்வி கேட்க வேண்டும்.சரி யாரிடம் கேள்விகள் கேட்பது?கேள்விகள் மனிதன் தனக்குதானே கேட்டுக்கொள்ள வேண்டியவை.ஆனால் நம்மில் பெரும்பாலானோர் கேள்விகளை மற்றவரிடம் கேட்டு நம் மேதாவிலாசங்களை காட்டிக்கொண்டிருக்கிறோம்.பிரச்சனை என்னவென்றால் நமக்கு புரியாத விசயங்களை மற்றவரிடம் கேட்கும் போது அது அவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.நம் கேள்வி நம்மை புத்திசாலியாக அடையாளம் காட்டிவிடுகிறது.ஆனால் அது ஒரு போலி அடையாளம்.ஏனென்றால் நமக்கு பதில் தெரியவில்லை.இப்படிதான் இந்த உலகம் கேள்விகளால் புத்திசாலிகளை அடையாளம் காணுகிறது.கேள்விகள் என்றும் நிரந்தரமானவை.பதில்கள் வெறும் கானல் நீர்.

ஏதென்ஸ் மக்கள் அந்த ஊர் கோவிலில் உள்ள மாந்தீரக பெண்ணிடம் கேட்டார்கள்.இந்த ஊரிலே எல்லாம் தெரிந்த மேதையார் என்று.உடனே அந்த பெண் சொன்னாள் சாக்ரடீஸ்.எல்லாரும் சாக்ரடீஸிடம் போய் இதை சொன்னார்கள்.அதற்கு அவர் சொன்னார் "எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கு மட்டுமே தெரியும்.ஆனால் நீங்களோ எல்லாம் தெரிந்தவர் போல் நடித்துக்கொண்டு இருக்குறீர்கள்".அதனால் தான் நான் மேதையாக தெரிகிறேன் என்றார்.

ஒரு அற்புதமான கதை ஒன்று சொல்வார்கள்.ஒரு ஊரில் ஒரு முட்டாள் இருந்தான்.ஊர் மக்கள் அனைவரும் அவனை முட்டாள் முட்டாள் என்றே அழைத்தார்கள்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மனிதன் ஊருக்குள்ளே வசிக்காமல் ஊரின் வெளியே வசித்துவந்தான்.ஒரு நாள் ஒரு ஜென் குரு அந்த பக்கமாக கடந்து போவதைப்பார்த்த அந்த மனிதன் அவர் காலில் விழுந்து தன் பிரச்சனையை விளக்கி கூறினான்.அவரும் அவனிடம் யார் என்ன சொன்னாலும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்டுக்கொண்டே இரு என்றார்.தான் ஒரு வருடம் கழித்து இந்த பக்கம் கடந்து போகும் போது தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார்.ஒரு வருடமும் கடந்து சென்றது .அந்த குரு மீண்டும் அந்த ஊரை கடந்து சொல்லும் போது ஊரே அந்த முட்டாள் மனிதனை தோளில் சுமந்து கொண்டு குருவை வரவேற்க காத்துக்கொண்டிருந்தனர்.குரு அந்த மனிதனிடம் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறாயா எனக்கேட்டார்.அதற்கு அவன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ஊரே தன்னை அறிவாளியென்று தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடுவதாகவும் கூறினான்.இந்த கதை பதில் தெரியாமல் கேள்வியோடு மட்டும் நின்று போகும் மனிதர்களைப் பற்றியது.

கேள்விகளை நமக்கு நாமே கேட்கும் போது நமது அறியாமை நமக்கு புரிகிறது.மற்றொன்று அறியாமை நம் அறியும் ஆவலை தூண்டி நம் தேடலை ஆரம்பித்து வைக்கிறது.தேடல் நம்மை எல்லையற்ற புரிதலின் ஆழத்திற்கு கூட்டிச்செல்கிறது.ஜென்னில் ஒரு அற்புத வரி சொல்வார்கள்."நீங்கள் தேட ஆரம்பிக்கும் போது ஒரு குரு உங்கள் முன் தோன்றுவார்".அதே சமயம் நாம் தேடும் பொருளும் நம்மை நோக்கி நகர ஆரம்பிக்கிறது.தேடல் நம்மை அறிவின் உச்சத்திற்கு இட்டுச்சென்று பிரகாசிக்க வைக்கிறது.

தன் மேல் ஏன் ஆப்பிள் விழுந்தது என தன்னை தானே கேட்டுக்கொண்டு விடை தேடி புறப்பட்டார் நியூட்டன்.விளைவு நவீன அறிவியலின் தந்தை ஆனார்.ஒளியோடு சேர்ந்து பயணம் செய்தால் என்னவாகும் என் ஒரு பன்னிரண்டு வயது சிறுவன் தன்னைதானே கேட்டுக்கொண்டதன் விளைவுதான் ஜன்ஸ்டீனின் "சார்பு மற்றும் சிறப்பு சார்புக்கொள்கை".சாக்ரடீஸ்,நீயூட்டன்,ஜன்ஸ்டீன் என எல்லோரும் கேள்விகளை தனக்கு தானே  கேட்டுக்கொண்டார்கள்.தீராத தேடல் அவர்களை தொற்றிக்கொண்டது.அதனால் தான் அவர்கள் அறிவின் உச்சத்தை தொட்டார்கள்.உன்னையே நீ அறிவாய் என்பதன் பொருள்.உன்னையே நீ கேள்விகேட்டு தேட ஆரம்பி என்று பொருள்.உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்.தீராத தேடல் உங்களை தொற்றிக்கொள்ளட்டும்.

1 comment :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..